தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

செவ்வாய், 3 நவம்பர், 2009

ஜோதிர்லிங்கக் கோயில்கள்.

இந்தியாவிலிருக்கும் முக்கியமான 12 சிவபெருமானின் தலங்களில் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இவை இந்தியாவில் அமைந்திருக்கும் இடங்களையும் அவை எப்படி அந்த இடங்களில் அமைந்தன என்பது குறித்த தகவல்களையும் சிவபுராணம் சொல்லுகிறது. அந்த பன்னிரண்டு ஜோதிர்லிங்கக் கோவில்கள் குறித்த சிறு தகவல்கள் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

1. சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

சோமா என்ற இன்னொரு பெயரைக் கொண்ட சந்திர பகவான் ரோகிணியையும் தக்ஷ மஹாராஜாவின் மகளையும் மணந்து கொண்டார். இரு மனைவிகளுக்குள் சோமா ரோகிணியை அதிகமாக நேசித்தார். இதை அறிந்த தக்ஷ மஹாராஜா சோமாவிற்கு சாபம் கொடுத்தார். சந்திரபகவான் ஒளியிழந்து தேயத் தொடகினார். சந்திரனின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட தக்ஷன் ப்ரபாஸா என்ற இடத்தில் சோமாவிற்கு சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்குமென்ற பரிகாரத்தையும் சொன்னார். அந்த இடத்திற்கு சென்ற சோமா ஒளியையும், தோற்றத்தையும் முழுமையாக பெற்றான். சந்திர பகவான் ப்ரபாஸாவில் சிவபெருமானுக்காகத் தங்கத் தகடுகளால் ஜொலிக்கும் சோமநாதர் கோயிலைக் கட்டினார். அரபிக்கடலின் தென்மேற்கு திசையிலுள்ள குஜராத் மாநிலத்தில் இந்தக் கோயில் இடம் பெற்றுள்ளது. சந்திர பகவானால் கட்டப்பட்ட சோமநாத் கோயில் சேதமடைந்து பிறகு இராவணன், கிருஷ்ண பரமாத்மா, பீமனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயில் 1026ஆம் ஆண்டில் முகமது கஜினி அழித்தான். அதன் பிறகு சோமநாத் கோயில் பல முறை புதுபிக்கப்பட்டது. தற்சமயமுள்ள சோமநாத் மந்திர் ஏழாவது முறையாக 1950ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது.

2. மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

கிருஷ்ணா நதியின் தென்திசையை ஒட்டி ரேஷபாகிரி மலைத் தொடரில் சிவபெருமான் உருவெடுத்து லிங்க வடிவத்தில் மாறினார் என்று சிவபுராணம் சொல்லுகிறது. இந்தக் கோயில் 1404ஆம் ஆண்டில் ஹரிஹர ராயா என்ற அரசனால் கட்டப்பட்டது. 8 மீட்டர் உயரத்தில் இந்தக் கோயிலைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கோயிலுலுள்ள லிங்கம் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முன்காலத்தில் மக்கள் இந்த லிங்கத்தை மல்லிகை மலர்களால் பூஜை செய்து வந்தார்கள். அதனால் இந்த லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான் இந்தக் கோயிலுக்கு வருகை தந்ததாகவும் அந்தச் சமயத்தில் ஸ்ரீ ராமர் ஸஹஸ்ரலிங்கத்தை நிறுவியதாகவும் புராணம் சொல்லுகிறது. இங்கு இவர் 1001 சிறிய லிங்கங்களை உருவாக்கினார் என்ற பெருமையும் இருக்கிறது. இந்தக் கோயிலில் பிரம்மராம்பிகா தேவியின் (பார்வதி தேவியின் இன்னொரு பெயர்) சன்னதியும் இடம் பெற்றுள்ளது.

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

துஷானா என்ற அரக்கன் அவந்தி நாட்டு மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். அவனுடைய கொடுமையை அழிக்கவும் அவனிடமிருந்து மக்களைக் காக்கவும் சிவபெருமான் இந்த பூமியில் தோன்றினார். துஷானாவைக் கொன்று அவந்தி நாட்டு மக்களை கொடுமையிலிருந்து விடுவித்தார். அதன்பிறகு மக்கள் சிவபெருமானை அங்கேயே நிரந்தரமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதின் காரணத்தால் மஹா கால் லிங்கமாக உருவெடுத்தார். மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் மாநகரத்தில் இந்த மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் இருக்கிறது.. இந்தக் கோயில் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. மாபெரும் சக்தியைக் கொண்ட சுயம்புவாக தோன்றிய மஹாகால் லிங்கம் கோயிலின் அடித்தளத்தில் உள்ளது. இதற்கு மேல்தளத்தில் விநாயகர், பார்வதி, கார்த்திகேயன் சன்னதிகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாவது தளத்தில் நாக சந்திரேஷ்வரர் சன்னதி உள்ளது. இந்தச் சன்னதியின் கதவுகள் நாகபஞ்சமியன்று திறந்து வைக்கப் படுகின்றன. கோயிலின் பிரதான சன்னதியில் 100 கிலோ எடையுள்ள வெள்ளித் தகடுகளால் செய்யப்பட்ட ருத்ரயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு காரகன் சிவபெருமான். இந்தக் கோயிலில் மஹாகாலேஷ்வர் லிங்கத்திற்கு மனிதப் பிணம் எரிக்கப்பட்ட சாம்பலால் அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

நர்மதை, காவேரி ஆகிய இரண்டு நதிகள் கூடுமிடத்திலுள்ள மன்ஹாடா தீவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. ஓம் என்ற வடிவத்திலுள்ள இந்தத் தீவின் வடதிசையில் கௌரிசோமநாதர் கோயில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கோயிலில் அர்ஜுனன், பீமனின் மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளன. பத்தாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட சித்தநாத் கோயிலும் இந்தத் தீவில் இடம் பெற்றிருக்கிறது. நவராத்திரி, கார்த்திகை, பௌர்ணமி ஆகிய பண்டிகைகள் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் இருக்கிறது. வாரனாசியை காசி என்றும் அழைக்கிறார்கள். இந்தோரை ஆண்ட அஹில்யாபாய் ஹோல்கர் என்ற மஹாராணி இந்தக் கோயிலைக் கட்டினார். கோயிலின் பிரதான சன்னதியிலுள்ள தங்கத்தகடுகள் மகாராஜா ரஞ்ஜித் சிங்கினால் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலுள்ளே ஞானவியாபி கிணறு ஒன்று உள்ளது. விஸ்வநாதர் சன்னதியில் வைக்கப்பட்டுள்ள லிங்கமும் இந்தக் கிணற்றிலிருந்துதான் கிடைக்கப் பெற்றது என்று புராணங்கள் சொல்லுகின்றன. தாமரை புஷ்பம், மந்தாரை புஷ்பம் ஆகியவைகளால் அலங்கரிக்கப்பட்ட லிங்கத்திற்கு தினந்தோறும் பாலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தண்டபாணி, மஹாவிஷ்ணு, காலபைரவன் சன்னதிகளும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருக்கின்றன.

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

ருத்ர இமயமலைத் தொடரில் இடம் பெற்றுள்ள இந்தக் கேதாரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் வருடத்தில் ஆறு மாதத்திற்கு மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற ஆறு மாதத்திற்கு மூடி வைக்கப்படுகிறது. பார்வதி தேவி சிவபெருமானுடன் இணைந்து அர்த்தநாரேஷ்வரராக தோற்றமளிக்க கேதாரேஷ்வரரை பிரார்த்தனை செய்தாள். பார்வதியின் வேண்டுதலுக்காக இங்கு சிவபெருமான் கேதாரேஷ்வர லிங்கமாக உருவெடுத்தார். இந்தக் கோயிலினுள்ளே பார்வதி, விநாயகர் சன்னதிகளும் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவர்கள், த்ரௌபதிதேவி, குந்திதேவி போன்றவர்களின் மூர்த்திகளும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருக்கிறது.

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

த்வாரகா பெட், த்வாரகா ஆகிய இரண்டு தீவுகளுக்கிடையே நாகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் உள்ளது. சிவபக்தியுடைய சுப்ரியா மற்றும் அவளுடைய தோழிகளையும் தாருகா என்ற அரக்கன் திடீரென்று தாக்கி அவர்களைக் கடத்திச் சென்று தாருகா வனத்தின் சிறையில் வைத்துக் கொடுமை படுத்தினான். சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக தோன்றி அந்த அரக்கன் தாருகாவை அழித்தார். அன்றிலிருந்து மக்கள் சிவபெருமானை நாகேஷ்வர ஜோதிர்லிங்கமாக பூஜித்து வருகிறார்கள். சிவ பக்தியுடைய நாமதேவர் சிவபெருமானின் புகழை அந்தக் கோயிலில் பாடி வந்தார். அவருடைய தொல்லையை தாள முடியாத மக்கள் நாமதேவரை கடவுளில்லாத இடத்தில் அமர்ந்து பாடச் சொன்னார்கள். நாமதேவர் கடவுளில்லாத இடத்தை காட்டும்படி மக்களிடம் கேட்டார். ஏரிச்சலடைந்த மக்கள் தென்திசையில் நாமதேவரை தூக்கிக் சென்று அமர்த்தினார்கள். திடீரென்று கிழக்கு திசையை நோக்கியிருந்த நாகேஷ்வர லிங்கம் தென்திசையை நோக்கித் திரும்பியது. கோயிலின் கோபுரம் கிழக்கு திசையை நோக்கியிருந்தாலும் பிரதான சன்னதி தென்திசையை பார்த்திருப்பது இங்கு விசேஷமானது.

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

மகாராஷ்டிராவிலுள்ள ஒளரங்காபாத் என்ற இடத்தில் கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் அமைந்துள்ளது. தேவகிரி மலைத்தொடரில் சுதர்மா சுதேஹா பிராமணத் தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். வேதங்களை அறிந்த சுதர்மா தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியமில்லை. இதனால் வேதனையடைந்த சுதேஹா சகோதரி கிரிஷ்னாவை சுதர்மாவுக்கு மணம் செய்து கொடுத்தார். சிவபக்தியுடைய கிரிஷ்னா 101 லிங்கங்களை உருவாக்கி பூஜைகள் செய்த பிறகு ஏல கங்கா நதியில் விசர்ஜனம் செய்தாள். அவளுடைய பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அவளுக்கு ஆண் குழந்தையை வரமாக கொடுத்தார். பொறமை கொண்ட சுதேஹா அவளுடைய ஆண் குழந்தையைக் கொன்று ஏலகங்கா நதியில் தூக்கி வீசினாள். அனைத்தையும் அறிந்த கிரிஷ்னா சிவபெருமானால் கொடுக்கப்பட்ட குழந்தை அவரால் ரட்சிக்கபடுவான் என்று மன உறுதியோடு சிவலிங்க பூஜையைத் தொடங்கினாள். லிங்கங்களை நதியில் விசர்ஜனம் செய்யும் போது அவளுடைய ஆண் குழந்தை திரும்பி வருவதைக் கண்டாள். சிவபெருமானும் அவள் முன் காட்சி தந்தார். தன் சகோதரியை மன்னிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள். தன்னுடைய பெயரில் சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக உருவெடுக்க வேண்டுமென்று அவளுடைய ஆசையையும் தெரிவித்தாள். அவளுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் அங்கு கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கமாக காட்சி கொடுக்கிறார். இந்தக் கோவிலில் மதிய வேளையில் பஜனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

நாசிக்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் த்ரியம்பக் என்ற இடத்தில் இந்தக் கோயில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் கண்களின் வடிவத்தில் காட்சி தருவது விசேஷமானது. பிராமணர்கள் நிறைந்த த்ரியம்பக் நகரத்தில் வேத பாடசாலைகள், ஆசிரமங்கள் அதிகமாக இருக்கின்றன.

10. ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் பழமையான கோயிலாகும் இந்தக் கோயிலில் பிரம்மாண்டமான நந்தி பகவான் இடம் பெற்றிருக்கிறார். சீதாதேவியால் ஸ்தாபனம் செய்யப்பட்ட ராமலிங்கம், அனுமாரால் கொண்டு வரப்பட்ட விஸ்வலிங்கம் ஆகிய இரண்டும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் ராமேஷ்வரத்தில் சிவபெருமானுக்கு சிறப்புப் பூஜை செய்தார் என்று ராமாயணம் சொல்கிறது.

11. பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

திரிபுரசுர அரக்கனின் தவத்தை மெச்சி சிவபெருமான் அவனுக்கு சாவில்லாத வரத்தை கொடுத்து கூடவே ஆண்பாதி, பெண்பாதி உடல் கொண்டவரால் அவனுக்கு சாவு என்று சொன்னார். சிவ பெருமானிடமிருந்து வரத்தை பெற்ற திரிபுரசுரன் மக்களை கொடுமைப் படுத்தினான். அவனுடைய கொடுமையை தாளமுடியாத மக்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தார்கள். கார்த்திகை பௌர்ணமியன்று பார்வதி தேவி சிவபெருமானின் உடலில் புகுந்து அர்த்தநாரீஷ்வரராக மாறி திரிபுசுர அரக்கனை கொன்றார். அவனோடு போராடும் சமயத்தில் பூமியைத் தொட்ட சிவபெருமானின் வியர்வைத் துளிகள் பீம நதியாக மாறியது. அந்த இடத்தில்தான் சிவபெருமான் பீமசங்கர் ஜோதிர்லிங்கமாக காட்சி அளிக்கும் கோவில் இருக்கிறது.

12. வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்)

சிவபக்தியுடைய இராவணன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுக்குள் ஒரு லிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான். அவனுடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்து, அவனிடம் சக்தி வாய்ந்த லிங்கத்தை கொடுத்தனுப்பினார். அரக்கர்கள் நிறைந்த இலங்கைக்கு இராவணன் லிங்கம் எடுத்துச் செல்வது தேவர்களுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை. இராவணனுக்கு தடங்கல்கள் உருவாக்க முடிவெடுத்தார்கள். திடீரென்று கங்கா தேவி இராவணன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டாள். தண்ணீர் நிரம்பிய வயிற்றின் பாரத்தை குறைக்க இராவணன் கையிலிருந்த லிங்கத்தை பிராமணனிடம் கொடுத்தான். இராவணன் அந்த பிராமணனை மஹாவிஷ்ணு என்று அறிந்து கொள்ளவில்லை. இராவணன் திரும்புவதற்குள் மஹாவிஷ்ணு லிங்கத்தை பூமியில் ஆழமாக புதைத்து விட்டு மறைந்தார். மண்ணில் புதைந்த லிங்கத்தை இராவணன் எடுக்க முயன்றும் தோல்வி அடைந்தான். லிங்கத்தை எடுக்க முடியாததால் சலிப்படைந்த இராவணன் இலங்கையிலிருந்து இந்த இடத்திற்கு வந்து பூஜை செய்தான் என்று புராணங்கள் சொல்லுகின்றன. லிங்கம் புதைந்த இடத்தை வைத்யநாத் ஜோதிர்லிங்கம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்தக் கோயிலைச் சுற்றி 22 கோயில்கள் இடம் பெற்றுள்ளன. சிவகங்கை குளமும் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளத்தில் நீராடினால் தீராத எந்த வியாதியும் மறைந்து விடும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் இங்கு அதிகமாக வந்து செல்லுகிறார்கள்.

சனி, 31 அக்டோபர், 2009

கடவுள் சிவனுடைய படங்கள்

இந்து மதம் காலத்திற்கு தக்கபடி தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஓர் அதிசய மதம். பல்வேறு காலக்கட்டங்களில் மிகவும் அழியும் நிலைக்கு சென்று மீண்டு வந்த மதம். உலகம் முழுக்க பரவி நிற்கும் புத்தமும், ஜைனமும் இந்தியாவில் நிற்க முடியாமல் செய்த மதம். இதோ காலங்களை கடந்து முதல் நாகரீகம் தொட்டு வணங்கப்படும் கடவுள் சிவபெருமானின் அறிய படங்கள். முதல் நாகரீக மனிதன் தோன்றியது நமது பாரத நாட்டின் சிந்து சமவெளியில் தான். அங்கு அவர்கள் வணங்கிய பசுபதி என்ற சிவ உருவம் தானே முதல் கடவுள். அதை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.




சித்தமெல்லாம் சிவமயம் தொடருக்காக பல நூல்களை வாங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையால் அத்தொடர் சற்று தாமதப்பட்டிருக்கிறது என்றாலும் ஈசன் அருளால் விரைவில் அடுத்த இடுகை உங்கள் மனம் மயக்க வரும் என்பதில் ஐயமெதுவும் இல்லை.

சிவன்

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர், சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தவரின் முழு முதற் கடவுள். சிவனை வழிபடுவதாலேயே சைவம் என்ற பெயர் ஏற்பட்டது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்பவர்களுள் சிவன் அழித்தல் தொழிலுக்கு அதிபதியாகக் கருதப்படுகிறார். சிவன் பல்வேறு வடிவங்களில் வணங்கப்படுகிறார். நடராஜர், தட்சிணாமூர்த்தி, உருத்திரன், அர்த்தநாரிசுவரர் என்னும் மூர்த்தங்கள் இவற்றுட் சில.

சிவனின் ஜந்து முகங்கள் -
1. சத்யோ ஜாதம்
2. வாமம்
3. அகோரம்
4. தற்புருடம்
5. ஈசானம்
இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

சிவனின் தோற்றம்

மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு அப்பகுதியிலேயே முதன்முதலில் நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.

சிவனது தனித்துவ அடையாளங்கள்

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றது.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றி தேவார பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
நெற்றிக்கண் காணப்படல்.
கழுத்து நிலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவை கொண்டிருத்தல்.
நீண்ட சுருண்ட சடாமுடி
தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(எருது) வாகனமாக கொண்டிருத்தல்.

சிவனது உருவத்திருமேனி

நடராஜர் -

வெண்கலதால் அமைந்த சோழர்கால நடராசர் சிலை

சிவனது உருவதிருமேனிகளில் நடராஜர் வடிவம் மிக பிரபல்யமானது.சிவனை ஆடலரசனாக கொள்ளும் வடிவாகும்.

தட்சணாமூர்த்தி -

ஆலமரத்தின் கீழ் தெற்குதிசையினை பார்த்தவாறு முனிவர்களுக்கு யோகத்தினை விளக்க்கும் வகையில் அமர்திருக்கும் வடிவ்மாகும்.

அர்த்த நாரிசுவரர் -

சிவனின் ஆண் உருவம் பாதியும்,பார்வதியின் பெணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைந்த வடிவாகும்.

இலிங்கம் -

சிவனது அரு உருவத்திருமேனிவடிவாகும்.

இலிங்கோற்பவர் -

சிவனது உருவதிருமேனிகளில் ஒன்றாகும்.கருவறையின் பின் புறமாக மேற்கு நோகிகி அமைந்திருக்கும்.இறைவனது பாதமும் முடியும் கண்ணிற்கு புலப்படத வகையில் இவ் வடிவம் அமைந்திருக்கும்.


புகழ் பெற்ற சிவதலங்கள்

சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும்.சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.

ஜோதி லிங்கங்கங்கள் உள்ள சிவதலங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)

2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்)

5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்)

6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்)

9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)

10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)

12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

பஞ்சபூத சிவதலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்று கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

1.மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர்.

2.நீர் (அப்புத்தலம்) - திருவானைக்கா

3.தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை

4.வளி (வாயுத்தலம்) - திருக்காளத்தி

5.வான் (ஆகாயத்தலம்) - சிதம்பரம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவதலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இதுதான்.

1.தில்லை (சிதம்பரம்) - ஆனந்த தாண்டவம்.

2.திருவாரூர் - அசபா தாண்டவம்.

3.மதுரை - ஞானசுந்தர தாண்டவம்.

4.அவிநாசி - ஊர்த்தவ தாண்டவம்.

5.திருமுருகன் பூண்டி - பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவதலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள்(அடைப்புக் குறிக்குள் சபைகள்)

1.தில்லை(சிதம்பரம்) - பொன் மன்றம் (கனக சபை).

2.திருவாலங்காடு - மணி மன்றம் (இரத்தின சபை).

3.மதுரை - வெள்ளி மன்றம் (இராஜ சபை).

4.திருநெல்வேலி - செப்பு மன்றம் (தாமிர சபை).

5.திருக்குற்றாலம் – ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்க சிவதலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

1.திருவாரூர் - வீதிவிடங்கர் (அசபா நடனம்).

2.திருநள்ளாறு - நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).

3.திருநாகைக் கோரணம் என்கிற நாகபட்டிணம் - சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).

4.திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல் -ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).

5.திருக்கோளிலி என்கிற திருக்குவளை -அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).

6.திருவாய்மூர் - நீல விடங்கர் (கமல நடனம்).

7.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)

முக்தி தரவல்ல சிவதலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

1.திருவாரூர் - பிறக்க முக்தி தருவது

2.சிதம்பரம் - தரிசிக்க முக்தி தருவது

3.திருவண்ணாமலை - நினைக்க முக்தி தருவது

4.காசி - இறக்க முக்தி தருவது


தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:

1.பாபநாசம்

2.சேரன் மகாதேவி

3.கோடகநல்லூர்

4.குன்னத்தூர்

5.முறப்பநாடு

6.திருவைகுண்டம்

7.தென் திருப்பேரை

8.ராஜபதி

9.சேர்ந்த பூ மங்கலம்

வியாழன், 29 அக்டோபர், 2009

ஆ...

மீண்டும் மீண்டும்
“ஆ....அம்மா”
அவன் மீது பைக் விழுந்து கிடந்தது.இடதுகை எலும்பு முறிந்து ரத்தம் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.ரத்த போக்கு அதிகம் என்பதால் மெல்ல அவன் சுயநினைவுகளை இழந்து கொண்டிருந்தான்.அவனுக்கு அதிகபட்சம் இருபது வயதிருக்கலாம்.போட்டிருந்த தங்க பிரேஸ்லெட்டும் கழுத்து ஒட்டிய மைனர் செயினும் அவனை நடுத்தரக் குடும்பத்திற்கும் மேலே என காட்டியது.
அலரல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டின் வேலைக்காரன் ஓடி வந்தான்.
“இந்த காலத்து பையன்களுக்கு பைக் ஓட்டினா கண்ணு மண்ணு தெரியரதேயில்ல”, அந்த நிலையிலும் இளைஞனை திட்டிக் கொண்டே உதவிக்கு சிலரை அழைத்தான்.ஆட்டோ மூலம் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அவனுக்கு நினைவு திரும்பியதும் அவனுடைய வீட்டிற்கும் தகவல் அனுப்ப பட்டது.
மூன்று மாதங்கள் கழித்து...
“பைக் எடுத்துக் கிட்டு போரதா இருந்தா கவணமா போ. முன்னாடி நடந்த சம்பவத்த நினைவுல வைச்சுக்கோ”, அப்பாவின் அட்வைஸ் மழையில் அவன் நனைந்து கொண்டிருக்கும் போதே அம்மா குறுக்கிட்டாள்.
“பையன் பிழைச்சு வந்ததே பெருமால் புண்ணியமுன்னு, நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கிட்டு இருக்கேன்.நீங்க என்னாடானா அவனை எப்ப்பார்த்தாலும் கரிச்சு கொட்டிக் கிட்டு இருக்கீங்க.”
“பையன் புது பைக் ஓட்டரத பார்த்து யார் யாரெல்லாம் பொறாமை பட்டாங்களோ, நீ இப்படி திரும்புடா” கையிலிருந்ததினை கொண்டு அவனுக்கு திருஷ்டி சுற்றினாள்.
“அம்மா, என்னாம்மா இதெல்லாம், இப்ப எதுக்கு தேவையில்லாம“
“அவ சொன்னா கேட்கமாட்டா டா”
“பொறுப்புள்ள அப்பா மாதிரி என்னைக்காவுது பேசறிங்களா”, அம்மா சலித்துக் கொண்டாள். அப்பா அவரின் அறைக்குச் சென்றார்.
சிறிது நேரத்தில் அந்த பெரிய வீட்டின் வாசல் முன்பு பூசணிக்காய் சிதறிக்கிடந்தது.
(கதையை முதலிலிருந்து படிக்கவும்).
சிறுகதை

தானம் – ஒரு பக்க சிறுகதை

தானம் – ஒரு பக்க சிறுகதை
தன்னுடைய பிறந்த நாளில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதினை வழக்கமாக கொண்டிருந்தார் பெரிய பண்ணை முதலாளி ருத்திரன்.இந்த முறை அவருக்கு திருமணம் வேறு முடிந்துவிட்டதால் இன்னும் சிறப்பாக செய்யலாம் என்பது அவர் எண்ணம்.அதன் ஏற்பாடுகளை கணக்குப் பிள்ளையிடம் செய்யச் சொல்லி உத்தரவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர் புது மனைவி கல்பனா குறுக்கிட்டாள்.

“மாமா நான் ஒரு கருத்து சொல்லட்டுமா”

“சொல்லுபுள்ள, எதை பத்தி கருத்து சொல்ல வாரவ?”

“இந்த வாட்டி கோவிலுள்ள அன்னதானம் செய்ய வேணாம்”

“காலங்காலமா செஞ்சுட்டு வர்ர வழக்கத்த ஏன்புள்ள வேணாங்குற?.சாமி மேல ஏதாவுது கோபமா”

“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா, கோவிலுள்ள வைச்ச செஞ்சா நல்ல வசதியுள்ள மனுசன்களும் சாமிபிரசாதமுன்னு வாங்கிசாப்பிட்டுப் புட்டு போயிடறா. மத்த மதத்துக்கார ஏழை சனங்களும் சாப்பிட வரதுக்கு தயங்குதுங்க.நான் எங்கருத்த சொல்லிப்புட்டேன்.ஏத்துக்கிரதோ ஏத்துக்காத்தோ உங்க இஸ்டம்”. ருத்திரன் என்ன செய்வதென்று யோசிக்கும் முன்பே.

“எஜமானி அம்மா சொல்லது நூத்துக்கு நூறு உண்மைதானுங்க” என்றவாறு கணக்கு பிள்ளையும் தாளம் போட்டார்.

“சரி கணக்கு, ஒரு பெரிய கல்யாண மண்டபத்தை பதிவு பண்ணீரு. இந்த தடவ எம் சம்சாரம் சொன்னபடி செஞ்சி பாத்திடுவோம்.”

தன் முதல் திட்டம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில், அப்படியே இரண்டு மூன்று பேனர் கட்டவுட்டுகளை வைத்துவிட்டால், பின்னால் கிராம தலைவர் தேர்தலுக்கு அவரை நிறுத்த வசதியாக இருக்கும் என்று மனதிற்குள் கணக்குளை போட்டுக் கொண்டிருந்தாள் கல்பனா.