தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.
சித்தமெல்லாம் சிவமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தமெல்லாம் சிவமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 நவம்பர், 2009

சித்தமெல்லாம் சிவமயம் – 3

அன்பு எதையும் பொருட் செய்யாது என்பதே உண்மை.ஈசன் அருளில் தொடரின் மூன்றாவது பாகம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அது உங்களின் பார்வைக்கு.

சிவனோடு பதினென் சித்தர்களும்.




சித்த மருத்துவம் –

சித்தர்கள் மக்களுக்கு செய்த நன்மையில் மிக முக்கியமானது மருத்துவ உதவி. கொல்லிமலை, சதுரகிரி, பொதிகை மலை, பழனி மழை, திருவண்ணாமலை என பலபல மலைகளில் செடிகள், கொடிகள், பட்டைகள், வேர்கள் என ஆய்வு செய்து மருத்துவ துறைக்கே புதிய வழிமுறையை வகுத்தவர்கள். இதை நாம் தமிழ் மருத்துவம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என பல பெயர்களில் அழைக்கிறோம்.

இந்த வைத்திய முறையில் மட்டுமே பக்க விளைவுகள் எனப்படும் பெரும்குறைபாடு இருக்காது. எளிமையான வழி முறைகளும், விலை அதிகமில்லா இயற்கை தாவரங்களும் மக்களிடம் சித்த மருத்துவத்தை தனித்தன்மையில் வைத்திருக்கின்றன. பல மருத்துவமுறைகளில் குணமாகாத நாள்பட்ட நோய்களுக்கும் சித்த மருத்தும் தீர்வு சொல்கின்றது.

சித்தர்கள் வெறும் செடி,கொடிகளை மட்டும் ஆய்வு செய்யவில்லை. மனிதனின் உடலினையும் ஆய்வு செய்திருக்கின்றார்கள். நாடிகள், பித்தங்கள், ஞானேந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தெளிவான மருத்துவ முறைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

தாங்கள் கண்டறிந்த எண்ணற்ற மருத்துவ குறிப்புகளை மறைக்காமல் பாடல்களாக எழுதிவைத்தவர்கள். சில மதிப்புமிக்க குறிப்புகள் அடங்கிய நூல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது என்பது வருத்தமான செய்தி. இந்த குறிப்புகள் தமிழில் மட்டுமல்லாது, சீன மொழியிலும் காணப்படுவதாக வரலாற்று ஆசிர்யர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள ஆங்கில மருத்துவம் கூட அவற்றை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டது.

பக்க விளைவுகள் –

சித்த மருத்துவத்தைப் பொருத்த மட்டில் பின்விளைவுகள் என்ற பயங்கரம் இல்லை. மற்ற மருத்துவத்தில் ஒரு நோய் குணமாவதற்கு எடுத்துக் கொண்ட மருந்தானது மற்றொரு நோயை தோற்றுவிக்கும் குணம் படைத்தது.(என்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு கற்பப்பை புற்று நோய்க்கான மருத்தும் செய்யப்பட்டது. அந்த மருத்துவத்தின் பக்க விளைவால் சில நாட்களில் வெண்குஷ்டம் எனப்படும் தோல்வியாதி அவருக்கு வந்துவிட்டது.) ஒரு நோயை குணப்படுத்திய மருந்து மற்றொரு நோய்க்கு வழிகாட்டியாக அமைந்துவிடும் கொடுமை மற்ற மருத்துவங்களில் இருக்கிறது. ஆனால் முறையான சித்த வைத்தியத்தில் இல்லை.

பத்தியம் -

சித்த மருத்துவத்தில் பின்விளைவுகள் இல்லாதது எத்துனை சிறப்போ அது போலவே பத்தியமும். சில நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பத்தியம் எனப்படுகின்ற உணவு கட்டுப்பாடு உண்டு. இதன் மூலம் தேவையில்லாத ஒவ்வாமைகளை தடுக்கின்றனர்.

இரசவாதம் –

சித்தர்களைப் பற்றி இன்று பலரும் மிகஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காரணங்களில் ஒன்று இந்த இரசவாதம். இரசவாதம் என்பது ஒருவகையான வேதியியல் முறை. எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயாரிக்கும். சொர்ணம் என்றதுமே சொக்கி போய்விடும் மனிதர்களில் பலர் இந்த சூட்சமம் அறிந்துகொள்ள மலைகளில் அலைந்து கொண்டும், கோடிக்கணக்கான பணங்களை ஆய்வுக் கூடங்களிலும் செலவு செய்துகொண்டும் இருக்கிறார்கள்.

நீங்கள் இப்போது தான் இதைப் பற்றி கேள்விப் படுகின்றீர்கள் என்றால் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சரியான முறையில் செய்தால் நிச்சியம் தங்கம் கிடக்கும்.இதை ஆங்கிலத்தில் ALCHEMY என்று சொல்வார்கள்.இதைப் பற்றிய ஆய்வுகள் உலகமெங்கும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவற்றை சித்தர்கள் செய்தமைக்கு ஆதாரமான பாடல்கள் உண்டு. அதில் ஒன்றான திருமூலர் சொல்லும் செடியின் பெயர் பரிசனவேதி. அந்த பாடல்...

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே

இப்படி செய்தால் தங்கம் கிடைக்குமா என ஐயப் படவேண்டாம். நிச்சியம் கிடைக்கும், ஆனால் அவர்கள் சொல்வது ஒரே ஒரு விஷயம் தான் சொர்ண ரகசியம் பலிக்க வேண்டுமென்றால் சொர்ணத்தின் மீது உங்களுக்கு ஆசை இருக்க கூடாது. உங்களுக்கு தங்கத்தின் மீது ஆசையில்லையென்றால் இரசவாத முறைகளை தேடிப் பாருங்கள். ஒருவேளை நீங்கள் அதிர்ஸ்டகாரனாக இருக்கலாம்.

பஞ்ச பட்சி சாத்திரம் –

ஐந்து வகையான பறவைகளை கொண்டு எழுதப்பட்ட சாத்திரம் பஞ்ச பட்சி சாத்திரம். அந்த பறவைகள் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். பறவைகளுக்கும் மனிதனுடைய நட்சத்திரத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து இந்த சாத்திரம் எழுதப்பட்டிருக்கின்றது.

இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும்.அந்த ஐந்து செயல்களை ஊண், நடை, நித்திரை, அரசு, மரித்தல் என்பர். ஆனால் வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறி நடக்கும்.

நாடி சோதிடம்-

பஞ்ச பட்சி சாத்திரம் போல இதற்கு தனி முறைகள் காணப்படுகின்றன. இதனைப் பற்றியும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றியும் பின்பு விரிவாக காணலாம். நாடி சோதிடம் மற்றும் பஞ்ச பட்சி சாத்திரம் பற்றிய பாடல்களை எழுதியவர் அகத்தியர்.

தியானம் மற்றும் யோகா –

முதலில் தியானத்திற்கும் யோகாவிற்குமான வேறுபாட்டினை புரிந்துகொள்ள வேண்டும். தியானம் என்பது மனதினைக் கட்டுபடுத்தக் கூடிய வகையில் ஓரிடத்தில் அமர்ந்தோ நின்றோ செய்யக் கூடிய அகம் சம்மந்தமான செயல்.ஒரு பொருளைப் பற்றி மட்டும் சிந்தித்தல் தியானம் என்கின்றனர்.பல வகையான தியான முறைகள் இன்றளவும் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. சற்குருவின் தியான லிங்க அமைப்பை ஆன்மீக அறிவியலின் புதிய முறையாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.

யோகா என்பது அகத்துடன் புறத்தையும் இணைத்து சில படிநிலை ஆசனங்கள் மூலம் இறை நிலை அடைதல். தற்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், வேதாந்திர மகரிசி, நித்தியாநந்தர் போன்றோரும் யோகா வழிமுறைகளை கற்று தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வழிமுறைகளும் சித்தர்களின் வழிமுறைகளை சார்ந்தே உள்ளது.என்றாலும் அவைகளை அடிப்படியாக எடுத்துக்கொண்டு நடைமுறைக்கு தக்கவாறு மாற்றம் செய்துள்ளார்கள்.

பாஷானம் –

பாஷானம் என்பது விஷம். பாதரசம் முதலிய பாஷானங்களிருந்து மருந்து தயாரிப்பது, அதைக் கொண்டே சிலைகள் செய்வது போன்ற பெரும் கலைகளில் வல்லவர்கள் சித்தர்கள்.இந்த பாஷான சித்தர்களில் மிகப் புகழ் பெற்றவர் போகர். இவர் தான் பழனிமலையில் இருக்கும் நவபாஷானத்தினாலான தண்டபாணி முருகன் சிலையை செய்தவர்.

சித்தர்கள் வான் வழியே பறப்பவர்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்படி அவர்கள் பறப்பதற்கு பாதரசம் என்ற பாஷானத்திலிருந்து ஒருவகையான மணியை செய்து பறந்து செல்வார்கள் என ஒரு புத்தகத்தில் படித்தேன். அந்த மணியின் பெயர் சூதவான் மணி.

பாம்பாட்டி சித்தரின் பாடலில் இந்த மணியைப் பற்றிய செய்தி இருக்கிறது.

கற்பக மூலிகைகள் -

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடல் -
"கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)

"செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர்.

இவர்கள் இயற்றிய பல தமிழ் நூல்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், மருத்துவம் முதனான துறைகளுக்கு முன்னோடியாகவும் இருக்கின்றன.
இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.

மேலும் அற்புதங்களுக்கு -

1.துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்.

2.முனைவர் இர.வாசுதேவன் *தமிழில் மருத்துவ இலக்கியங்கள்*, பூங்கொடி பதிப்பகம்.

3. http://snapjudge.wordpress.com/2008/04/29/ட்விட்டர்த்துவம்/#comment-12568.

4. விக்கிபீடியா

பி.கு –

அடுத்த சித்தமெல்லாம் சிவமயத்தில் அகத்திய மாமுனியின் அற்புதங்கள். காத்திருங்கள் அகத்தியரின் தரிசனத்திற்கு.

ஆங்கில விசைப் பலகை பயண்படுத்தும் நண்பர்களின் தேடலுக்காக:
Sivan, Sivan Story, tamil old people, cetharkal, Sithairkal, Sithergal, Sithargal,mamuni, akatheyar,tamil medical, tamil Songs, tamil poems, 18 hindu guru, munevarkal, munigal

மர்மங்கள் தொடரும்...

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

சித்தமெல்லாம் சிவமயம் – 2

சித்தர்களின் மர்மங்களை வெளியிடும் தொடரின் வெற்றிகரமான இரண்டாவது கட்டூரை இது.

கருத்துரை மூலம் வாழ்த்துகள் தெரிவித்த நண்பர்களுக்கும், மெயில் மூலம் சித்தர்களின் புத்தங்கள் பற்றியும், வலைப்பூக்கள் பற்றியும் தெரிவித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்களால் என்னுடைய தேடல் துரிதமாகியுள்ளது.தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே...

சித்தர்களின் சித்துவிளையாட்டுகள் –

சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த சித்திகளில் எட்டு பெரும் சித்திகள் உள்ளன. இதை அட்டமா சித்திகள் என கூறுகின்றார்கள். அவைகளை அறிந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள்.

1. அணிமா – அணுவைக் காட்டிலும் சிறியதாக வடிவெடுத்தல்.

2. மகிமா – மலையை விட பெரிய வடிவெடுத்தல்.

3. கரிமா – மெல்லிய வடிவாக இருத்தலும், கைகளால் தூக்க இயலாத அளவிற்கு கனமாக இருத்தலும், நுகர்ச்சியின் தொடக்குகள் பற்றாமல் இருப்பதுவுமான ஆற்றல்.

4. இலகிமா – காற்றை விட மெல்லிய வடிவெடுதல்.


5. பிராப்தி – நினைத்த பொருளை, நினைத்த நேரத்திலே பெரும் ஆற்றல்.

6. பிராகாமியம் – பல பல வடிவங்களை எடுத்தலுக்கும், அளவுக்கதிகமான வலிமை அல்லது ஆற்றல் உள்ளமைக்கும் இப்படி பெயர்.

7. ஈசாத்துவம் – தேவர்கள் முதல் சிறு உயிர்கள் வரை தன்னை வணங்கி வழிபடும் நிலை.


8. வசித்துவம் – தன்னை கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதும், கோள்களையும், மீன்களையும் தன் வசம் செய்வதுமான ஆற்றல். வசியம் என அனைவராலும் அறியப்பட்டுள்ளது.

இதைவிட சிறந்த பல்வேறான சித்திகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கூடுவிட்டு கூடுபாயும் நிலை. சித்தர்கள் இந்த அட்டமா சித்திகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் சித்தர்களின் தனிப்பட்ட வாழ்கைகளைகளை விவரிக்கும் போது உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சித்தர்களின் மதம் –

எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்ற மதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள் தெரிந்திருக்கின்றன.


சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள். அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள். இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும் உண்டு.

இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும் வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக நான்கு வழிகள்.

1. சாலோகம் – இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை.

2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.

3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு.

4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை.

அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார். பாம்பாட்டி சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர். இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே.

சித்தர்களினால் ஏற்பட்ட பலன் –

சித்தர்களின் அறிவு திறத்தால் ரசவாதம், நாடிசோதிடம், பட்சி சாத்திரம், சித்த வைத்தியம், யோகா, தியானம் போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் போல சிலவற்றை அமைத்து சித்தர்கள் தங்களது துறையில் வல்லுனர்கள் ஆனார்கள் என்கின்றனர். அது மட்டுமல்லாது உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க காட்டிலும் குகையிலும் ஆராட்சி செய்ததால் மக்களுக்கு தெரியாத பல அரிய மூலிகைகளையும், முறைகளையும் சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

ஆயகலைகள் அறுபத்தி நான்கு -

சித்தர்கள் ஆயகலைகள் அறுபத்தி நான்கில் (சிலவற்றை தவிர) சிறந்து விளங்கியிருக்கின்றனர். அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கியதாக கூட கருத்துகள் நிலவுகின்றன. இக்கூற்று எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.ஆனால் ஒவ்வொறு சித்தரும் ஒரு கலையிலாவது சிறந்து விளங்கியிருக்கின்றனர். போகர் என்னும் சித்தர் சிற்பங்களை வடிப்பதில் வல்லவராக திகந்திருக்கிறார், பாம்பாட்டி சித்தர் விஷமுறிவு மருத்துவதுறையிலும், அகத்தியர் முதலானோர் எழுத்தாற்றல் கலையிலும் சிறந்து விளங்கி உள்ளதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

சரி அறுபத்தினான்கு கலைகள் என்னென்ன? என்று தெரிந்தால் தானே நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். அதற்காக இங்கே பட்டியல். இந்த பட்டியலும் காலத்திற்கு ஏற்றாற் போல மாறுபட்டுள்ளது.

முதல் பட்டியல் -
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).


வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

போர் பயிற்சிகள், யானையேற்றம்,குதிரையேற்றம் போன்ற மன்னர்கள் செய்யக்கூடிய கலைகளில் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகமே. சில சித்தர்கள் மன்ன்னாக இருந்து பின் சித்தர்களாக மாறியவர்கள் என்பதனை நாம் மறக்க கூடாது. ஆனால் அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்), வளிக்கட்டு (வாயுத்தம்பனம்), கண்கட்டு (திருட்டித்தம்பனம்), நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்),புதையற்கட்டு (கனனத்தம்பனம்),வாட்கட்டு (கட்கத்தம்பனம்),சூனியம் போன்றவற்றில் தேர்ந்திருப்பதற்கான வழிகள் உண்டு. சித்தர்களைப் பற்றிய செவிவழிச் செய்திகள் இதை உறுதி படுத்துகின்றன.

எந்தெந்த சித்தர்கள் எவற்றில் வல்லவர்கள் என்பதினை அவர்களுடைய தனிப்பட்ட வரலாறு இடுகைகளில் இடுகின்றேன். கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள்.

மர்மங்கள் தொடரும்...

திங்கள், 27 ஜூலை, 2009

சித்தமெல்லாம் சிவமயம் - 1

சித்தர்களின் பாடல்களை படித்து இன்புற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்து சித்து விளையாட்டில் உலகத்தையே நல்வழிப்படுத்திய மகாபுருசர்களின் வரலாறுகளையும், அவர்களின் மர்மங்களையும், வாழ்க்கையையும் அறிந்திட தயாராகுங்கள்.

சித்தர்கள் –

தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.

சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.

சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

புதிதாக தெரிந்த செய்தி –

பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.

பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்

அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி

வேறுபாடுகள் அற்றவர்கள் –

இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.

அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.

இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.

108 சித்தர்களின் பெயர்கள் -

நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.

1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.

ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.

இந்தப்பட்டியல் தொகுக்கப்பட்ட ஒன்று என்பதால் நீங்கள் படித்திருந்த, கேள்விபட்டிருந்த சில சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டு போயிருக்கலாம், அப்படி ஏதேனும் சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு சித்தர்களைப் பற்றி செய்திகள் தெரிந்தாலோ கருத்துரையில் தெரிவிக்கவும். என்னுடைய பணியில் நண்பர்கள் நீங்களும் பங்கெடுத்து கொள்ள மிகவும் தாழ்மையுடன் அழைக்கிறேன்.சித்தர்கள் பற்றிய செய்திகள், வலைப்பூக்கள் என தங்களுக்கு தெரிந்ததை அடியேனுக்கு அருள jagadees1808@gmai.com மெயில் அனுப்புங்கள்.

மர்மங்கள் தொடரும்...