தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.
பாரதிதாசன் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிதாசன் பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

காதல் நினைவுகள்-12

காதல் நினைவுகள்-12
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

12. வாளிக்குத் தப்பிய மான்

கணக்கப் பிள்ளையின்மேல்--அவளோ
கருத்தை வைத்திருந்தாள்.
மணக்கும் எண்ணத்தினை--அவளோ
மறைத்து வைத்திருந்தாள்.
பணக்கு வியல்தனைப்--பெரிதாய்ப்
பார்த்திடும் வையத்திலே,
துணைக்கு நல்லவனின்--பெயரைச்
சொல்வதும் இல்லைஅவள்.

அழகிய கணக்கன்--உளமோ
அவள் அழகினிலே
முழுகிய தன்றி-- மணக்கும்
முயற்சி செய்ததில்லை.
புழுதி பட்டிருக்கும்--சித்திரம்
போல இரண்டுளமும்
அழிவு கொள்ளாமல்--உயிரில்
ஆழ்ந்து கிடந்தனவாம்.

மணப்பிள்ளை தேடி--அலைந்தே
மங்கையின் பெற்றோர்கள்
பணப்பிள்ளை கிடைக்க--அவன்மேல்
பாய்ந்து மணம்பேசி
இணக்கம் செய்துவிட்டார்--மணமும்
இயற்றநாள் குறித்தார்.
மணத்தின் ஓலைப்படி--நகரின்
மக்களும் வந்திருந்தார்.

பார்ப்பனன் வந்துவிட்டான்--மணத்தின்
பந்தலில் குந்திவிட்டான்.
'கூப்பிடும் மாப்பிள்ளையைப்--பெண்ணினைக்
கூப்பிடும்' என்றுரைத்தான்.
ஆர்ப்பாட்ட நேரத்திலே--ஐயகோ
ஆகாய வீதியிலே
போய்ப்பாடும் மங்கையுள்ளம்--கணக்கன்
பொன்னான மேனியினை!

கொட்டு முழக்கறியான்--கணக்கன்
குந்தி இருந்தகடை
விட்டுப் பெயர்ந்தறியான்--தனது
வீணை யுளத்தினிலே
கட்டிச் சருக்கரையைத்--தனது
கண்ணில் இருப்பவளை
இட்டுமிழற்று கின்றான்--தனதோர்
ஏழ்மையைத் தூற்றிடுவான்.

பெண்ணை அழைத்தார்கள்--மணமாப்
பிள்ளையைக் கூப்பிட்டனர்.
கண்ணில் ஒருமாற்றம்--பிள்ளைக்குக்
கருத்தில் ஏமாற்றம்
'பண்ணுவதாய் உரைத்தீர்--நகைகள்
பத்தும் வரவேண்டும்;
எண்ணுவதாய் உரைத்தீர்--தொகையும்
எண்ணிவைக்க வேண்டும்.'

என்றனன் மாப்பிள்ளை தான்--பெண்ணினர்
'இன்னும் சிலநாளில்
ஒன்றும் குறையாமல்--அனைத்தும்
உன்னிடம் ஒப்படைப்போம்.
இன்று நடத்திடுவாய்--மணத்தை'
என்று பகர்ந்தார்கள்.
'இன்று வரவேண்டும்--அதிலும்
இப்பொழு' தென்றுரைத்தான்.

'நல்ல மணத்தைமுடி--தொகையும்
நாளைக்கு வந்துவிடும்.
முல்லைச் சிரிப்புடையாள்--அழகு
முத்தை மணந்து கொள்வாய்.
சொல்லை இகழாதே'--எனவே
சொல்லியும் பார்த்தார்கள்.
'இல்லை, முடியாது--வரட்டும்'
என்று மறுத்துவிட்டான்.

மங்கையைப் பெற்றவனும்--தனது
வாயையும் நீட்டிவிட்டான்.
அங்கந்த மாப்பிள்ளையும்--வாலினை
அவிழ்த்து விட்டுவிட்டான்.
பொங்கும் சினத்திலே--வந்தவர்
போக நினைக்கையிலே
தங்கம் நிகர்த்தவளின்--அருமைத்
தந்தை உரைத்திடுவான்.

'இந்த மணவரையில்--மகளுக்
கிந்த நொடியினிலே,
எந்த வகையிலும்நான்--மணத்தை
இயற்றி வைத்திடுவேன்.
வந்துவிட்டேன் நொடியில்'--எனவே
வாசலை விட்டகன்றே
அந்தக் கணக்கனிடம்--நெருங்கி
'அன்பு மகளினை நீ

வந்து மணம்புரிவாய்'--என்றனன்
மறுத்துரைப் பானோ?
தந்த நறுங்கனியைக்--கணக்கன்
தள்ளி விடுவானோ?
முந்தை நறுந்தமிழைத்--தமிழன்
மூச்சென்று கொள்ளானோ?
அந்த நொடிதனிலே--கணக்கன்
ஆடி நடக்கலுற்றான்.

'ஆசைக் கொருமகளே--எனதோர்
அன்பில் முளைத்தவளே!
காசைக் கருதிவந்தான்--அவனோ
கண்ணாலத்தை மறுத்தான்.
காசைக் கருதுவதோ--அந்தக்
கணக்கனைக் கண்டு
பேசி மணம்முடிக்க--நினைத்துன்
பெற்றவர் சென்றுவிட்டார்.

ஏழைஎன் றெண்ணாதே--கணக்கன்
ஏற்ற அழகுடையான்.
தாழ இருப்பதுவும்--பிறகு
தன்தலை நீட்டுமன்றோ!
எழையென் றெண்ணாதே'--எனவே
ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன்?--'மாப்பிள்ளை
யார்?' என்று கேட்டனள்பெண்.

'அந்தக் கணக்கப்பிள்ளை'--எனவே
அன்னை விளக்கிவிட்டாள்.
குந்தி இருந்தமயில்--செவிகள்
குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் எனஎழுந்தே--தனது
தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக்--குறிக்க
வாயும் வராதிருந்தாள்.

அந்த மணவறையில்--உரைத்த
அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும்--அவனின்
ஆசைமயில் தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி--நடுவில்
கொட்டு முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின்--நடுவில்
மணம் முடித்தார்கள்.

'சிங்கக் குழந்தைகளை--இனிய
செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே--அங்கமே
பூரிக்க ஈன்றிடுக.
திங்களும் செங்கதிரும்--எனவே
செழிக்க நல்லாயுள்'
இங்கெழும் என்வாழ்த்து--மொழிகள்
எய்துக அவ்விருவர்!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

காதல் நினைவுகள் -10

10. பிசைந்த தேன்
பெண்ணேபாராய், பெண்ணே பாராய்!
வெண்ணெயில் மாப்பிசைந்து, விரிந்த உள்ளங்கை
ஒன்று கீழுற, மற்றொன்று மேலுற
மாற்றி மாற்றி வடைதட்டி இட்டும்,
ஊற்றிய நெய்யில் 'ஒய்'என வேகுவதில்
இட்டவிழி எடாமலும், இருக்கும் ஓவியப்
பெண்ணே பாராய், பெண்ணே பாராய்!

இருவர்நாம் ஒன்றாய் இருந்து,நம் விழிநான்கு
காண, இரண்டு கருத்தும் கலந்தபடி
ஒரே நேரத்தில்நம் உயிர்இன் புறுவதை
விரும்புகின்றேன்! வீதியில் நடப்பது
கரும்பான காட்சி, காதுக்கு நறுந்தேன்!
தனித்திருந்து காண் என்று சாற்றிவிடாதே!
சன்னலண்டை என்னிடம், விரைவில்
பெண்ணே வாராய், பெண்ணே வாராய்!

பார்த்தனையோ என் பச்சை மயிலே?
'புதிதிற் பூத்த பூக்காடுதான் அது'!
நான் அதைப் பெண்ணென்று நவிலமாட்டேன்.
அக்காட்டின் நடுவில் 'அழகுடன் மணத்துடன்
செக்கச்செவேலெனச் செந்தாமரை' பார்!
அதை, அவள் வாய்என்று அறைய மாட்டேன்
அம்மலர் இரண்டிதழ் அவிழ்த்தது பார்நீ
நான் அதை உதடுஎன்று நவிலமாட்டேன்.

'இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள்'
வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்?
அவ்விதழ் அசைந்தசைந் தசைந்து கனியடு,
பிசைந்ததேன் கேள் கேள் அதனை
இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே!

காதல் நினைவுகள்-9

9. காதல் இயற்கை
மறவன் சொல்லுகிறான்:

கண்ணிமையின் கடைக்கூட்டால் என்னைத் தட்டிக்
கனியிதழின் வண்ணத்தால் நெஞ்சை அள்ளி
மண்ணிடையே வாழ்வேனை உனது மையல்
மடுவினிலே தள்ளியபின் ஏடி மானே!
எண்ணிடையே ஏறாத பொய்மை வார்த்தை
ஏதேதோ சொல்லுகின்றாய் இதுவும் நன்றோ?
தண்ணிழலைத் தாவுகின்றேன்; சாதி பேதத்
தணலில்எனைத் தள்ளுகின்றாய் சகிப்ப துண்டோ?

குறவேந்தன் மகளடிநீ! அதனால் என்ன?
குறிஞ்சிநிலப் பெண்ணாதல் அப்பேர் இட்டார்!
மறவேந்தன் மகன்நான்தான்.வார்த்தை பேதம்
மாய்ப்பதுண்டோ நல்காதல் மகத்து வத்தை?
அறஞ்சொல்வார் இதைச்சொல்லி நமது வாழ்வை
அழிப்பர்எனில் அவ்வறத்தை அழிக்க வேண்டும்.
புறங்காண்போம் குள்ளர்சிலர் சொல்லும் பேச்சைப்
புனிதமடி ஒத்தஉளத் தெழுந்த காதல்.

* * * * *

குறத்தி சொல்லுகிறாள்:

கருமுகிலைப் பிளந்தெழுந்த மின்னும் வானும்
கைகலக்கும் போதுகல வாதே என்று
பெரும்புவியே நீசொன்னாய். ஐய கோஉன்
பேதமைக்கு நான் அஞ்சும் அச்சத் தாலே
அரும்புமிளம் பருவத்தான் ஆவி போன்றான்
அயர்கின்றான்;அயர்கின்றேன்.ஒன்று பட்டு
விரும்புகின்ற காதலினை மூடக் கொள்கை
வெட்டியதால் இருதுண்டாய் வீழ்ந்தோம் நாங்கள்!

உள்ளத்தில் உதித்தெழுந்த காதல் தீயில்
உடல்எரித்தல் யானறிவேன்; அறியார் மற்றோர்.
தள்ளத்தான் முடிவதுண்டோ அவன்மேல் ஆசை?
தணியாது போகுமெனில் உயிர்தான் உண்டோ?
அள்ளத்தான் போகின்றேன் அள்ளி அள்ளி
அருந்தத்தான் போகின்றேன் அவன்இன் பத்தை
துள்ளிப்பாய்ந் திடுநெஞ்சே! அந்தோ அந்தோ
துடுக்கடங்கி னாய்மூட வழக்கத் தாலே!

* * * * *

இயற்கை சொல்லுகிறது:

காதல்எனும் மாமலையில் ஏறி நின்றீர்
கடுமூட வழக்கத்துக் கஞ்ச லாமோ?
ஈதென்ன வேடிக்கை! சிரிப்பு வந்தென்
இதழ்கிழித்தல் கண்டீரோ காதல் மக்காள்!

குறத்தி சொல்லுகிறாள்:

மோதவரும் ஆணழகே வா வா வா வா!
முத்தம்வை இன்னொன்று; வைஇன் னொன்று!

மறவன் சொல்லுகிறான்:

மாதரசி கனியிதழோ தேனோ--சாதி
வழக்கழிக; இயற்கைத்தாய் வாழ்க நன்றே!

காதல் நினைவுகள் -8

8. அவளை மறந்துவிடு
மறந்துபோ நெஞ்சே அந்த
வஞ்சியை நினைக்க வேண்டாம்
'இறந்துபோ' என்றே என்னை
இவ்விடம் தனியே விட்டாள்!
பறந்துபோ இரவே என்றேன்
எருமையா பறந்து போகும்?
உறங்கவே இல்லை கண்கள்
ஒட்டாரம் என்ன சொல்வேன்?

மருந்துகேள்! அவளை நெஞ்சே
'மறந்துபோ' துன்பம் இல்லை!
இருந்தொன்றை நினைப்பேன்; அந்த
ஏந்திழை குறுக்கில் தோன்றி
அருந்தென்பாள் கனியுதட்டை
அவள் அங்கே இருந்தால் தானே?
வரும்தென்றல்! தொடுவாள் என்னை,
மலர்மேனி இருந்தால் தானே?

பாலோடு சீனி யிட்டுப்
பருகுவேன் அங்குத் தோன்றி
மேலோடு வார்த்தை சொல்லி
விரைவோடு மறைந்து போவாள்!
சேல்ஓடும் போது பின்னே
சிச்சிலி விழிகள் ஓடல்
போலோடி ஏன் அவள்பால்
பொருந்தினை? மறப்பாய் நெஞ்சே!

ஏட்டினில் கவிதை தன்னில்
இவளைத்தான் காணு கின்றேன்.
கூட்டினிற் கிளியும் வானில்
குளிரிளம் பிறையும் என்றன்
வீட்டினில் திருவி ளக்கும்
அவளெழில் விளக்கல் அன்றிக்
காட்டவே இல்லை என்றன்
கவலைக்கு மருந்து நெஞ்சே!

எனைக்கண்ட தோழன் காதில்
ஏந்திழை பிரிந்த துன்பம்
தனைச்சொன்னேன். அந்தத் தீயோன்,
தையலாள் வரும் வரைக்கும்
நினக்குயிர் வேண்டும்; அன்னாள்
நினைவினால் வாழ்க என்றான்.
எனக்கது சரிப்ப டாது
மறந்துபோ எனது நெஞ்சே!

காதல் நினைவுகள்-7

7. அவள்மேற் பழி
'கைப்பிடியில் கூட்டிவரக்
கட்டளையிட்டாள்' என நீ
செப்புகின்றாய் வாழியவே வாழி-- 'நான்
ஒப்பவில்லை' என்றுரைப்பாய் தோழி!

தேரடியில் கண்ட அவள்
தேனிதழைத் தந்தவுடன்
'ஊருக்கெனைக் கூட்டிச்செல்க' என்றாள்--தன்னை
யாருக்குமுன் வாக்களித் திருந்தாள்?

சோலையிலே வஞ்சியினைத்
தொட்டிடுமுன் சேல் விழியாள்
நாலுதரம் சுற்றுமுற்றும் பார்த்தாள்--எந்தக்
காலிக்கவள் அஞ்சிமுகம் வேர்த்தாள்?

கோட்டைவழி என்னை வரக்
கூறி அவள் நான் வருமுன்
பாட்டையிலே ஏன் தனித்து நின்றாள்?--எனைக்
கூட்டிவரப் பசப்பு கின்றாள்?

வல்லியினை முத்த மிட்டேன்
வாய்த்த என்றன் மேனியினை
மெல்லஅவள் ஏன்தடவ வேண்டும்?--வேறு
நல்லஉடலோ அவட்கு வேண்டும்?

'புன்னகையும் பூப்பதில்லை!
புதுமலரும் தீண்டவில்லை;
என்நினைவால் வாடுகின்றாள்' என்றாய்-- அன்று
சன்னலிலே யாருக்காக நின்றாள்?

'தொத்துகிளி யாள் எனது
தோளின் மிசை வந்திருக்கப்
பித்துமிகுந் தாள்' என மொழிந்தாய்--அவள்
இத்தெருவில் யாருக்காக வந்தாள்?

'ஆடுமயில் என் உளத்தை
ஆடரங்கம் ஆக்கிவிட
நாடிநலிந்தாள்' எனச்சொல் கின்றாய்--அவள்
மாடியிலே ஏன்ஒருநாள் நின்றாள்?

காதல் நினைவுகள்-6

6. சொல்லித்தானா தெரியவேண்டும்
தாயிருக்கையில் தனமிருக்கையில்
சஞ்சல மென்ன மானே--நல்ல
பாயிருக்கையில் புழுதித் தரையில்
படுத்துப் புரளும் தேனே!
வாயிருக்கையில் கேளடி நல்ல
வான நிலவும் கொடுப்பேன்--இன்று
நீயிருக்கிற நிலை சகியேன்
நிலத்தினில் உயிர் விடுப்பேன்.


என்ன குறைச்சல்? எதனில் தாழ்த்தி?
யானை போல அப்பா--நீ
சொன்ன நொடியில் குறை தவிர்ப்பார்!
சொல்லுவதும் தப்பா?
சின்ன இடுப்பு நெளிவ தென்ன
சித்திரப் புழுப் போலே--அடி
கன்னி உனக்குக் கசந்ததுவோ
காய்ச்சிய பசும் பாலே?


அண்ணன்மார்கள் பாண்டியர்கள்
ஆசைக் கொரு தம்பி-- அவன்
எண்ண மெல்லாம் உன்னிடத்தில்!
ஏற்ற தங்கக் கம்பி.
தண்ணென் றிருந்த உனது மேனி
தணல் படுவது விந்தை-- உன்
கண்ணில் கண்ட அத்தானுக்குக்
கலங்கியதோ சிந்தை!

காதல் நினைவுகள்-5

5. இன்னும் அவள் வரவில்லை
மங்கையவள் வீட்டினிலே கூடத்துச் சுவரில்
மணிப்பொறியின் இருமுள்ளும் பிழைசெயுமோ! மேற்கில்
தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி
தலைமூழ்க மறந்தானோ! இருள்என்னும் யானை
செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ!
சிறுபுட்கள் இன்னும்ஏன் திரிந்தனவான் வெளியில்!
திங்கள்முகம் இருள்வானில் மிதக்கஅவள் ஆம்பற்
செவ்வாயின் இதழளிக்க இன்னும் வர விலையே!

மணியசையக் கழுத்தசைக்கும் மாடுகளும் இன்னும்
வயல்விட்டு வீட்டுக்கு வந்தபா டில்லை.
துணியுலர்த்தி ஏகாலி வீடுநுழைந் திட்டால்
தொலையாத மாலைதான் தொலைந்துபோ மன்றோ!
அணியிரவும் துங்கிற்றோ காலொடிந்த துண்டோ;
அன்றுபோல் இன்றைக்கேன் விரைந்துவர வில்லை!
பிணிபோக்கும் கடைவிழியாள் குறுநகைப்பும் செய்தே
பேரின்பம் எனக்கருள இன்னும்வர விலையே!

முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும்இருக் கின்ற
பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை?
பூங்கொடியாள் வருவதாம் நேற்றெனக்குச் சொன்ன
நல்லஇரா வருவதற்கு வழிதானோ இல்லை?
நானின்பம் எய்துவதில் யாருக்குத் துன்பம்?
சொல்லைத் தேன் ஆக்கிஎனை அத்தான் என்றள்ளிச்
சுவைக்கடலில் தள்ளஅவள் இன்னும்வர விலையே!

பெருமக்கள் கலாம்விளைக்கும் மாலைமறைந் திட்ட
பிறகுவரும் நள்ளிரவு! யாவருமே துயில்வார்!
திருமிக்காள் தன்வீட்டுப் படிஇறங்கும் போதில்
சிலம்பொலியும் இவ்விடத்தில் கேட்டிடும்என் காதில்!
உருமிக்க பெரும்புறத்துக் கரும்பாம்பின் தீய
ஒளிமாலை விழிஇன்னும் மூடாத தேனோ!
புருவத்து வில்எரியும் நீலமலர் விழியாள்
புத்தமுதம் எனக்குதவ இன்னும்வர விலையே!

சிற்றுளிக்கும் பிளவுபடா வல்இரும்பு போல்வாள்
தேனூற எனைநோக்கி வாய்மலர்ந்து நின்றே
நற்றுளிகள் அமுதமுதாய் நன்கருள்செய் திட்டாள்
நள்ளிரவில் அத்தானே நான்வருவேன் என்றே!
வெற்றொளியும் வெறுந்தொழிலும் மிகும்மாலை என்னும்
விழல்மடிய இருளருவி எப்போது பாயும்?
பொற்றொடியாள் எனைத்தழுவித் தழுவிநனி இன்பம்
புதிதுபுதி தாய்நல்க இன்னும்வர விலையே!

மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும்
வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே!
நாற்றிசையும் பெருகிவரும் இருட்பெருவெள் ளத்தை
நடுவிருந்து தடுக்கின்றான் பரிதி; அவன் செய்கை
மாற்றியமைத் திடஏதும் வழியுண்டோ? என்றன்
மையலினை நான்பொறுக்க ஒருவழியுங் காணேன்.
சேற்றிற்செந் தாமரையாம் இரவில்அவள் தோற்றம்!
தீயில்எனைக் குளிர்செய்ய இன்னும்வர விலையே!

காதல் நினைவுகள்-4

4. காதலி காதலனுக்கு
"பறப்பதற்குச் சிறகில்லை"

*

காதல,
நான் பிழைசெய்தேன்; என் ஆசை
உன்மனத்தில் கழிந்ததென்று
கருதினேன்! கடிதத்தைக் கண்டவுடன்
களிப்புற்றேன்! களிப்பின் பின்போ
வாதையுற்றேன்! பறப்பதற்குச் சிறகில்லை!
காற்றைப்போல் வந்தே னில்லை
வனிதைஇங்கே-நீஅங்கே! இடையில்இரு
காதங்கள் வாய்த்த தூரம் !
சாதலுக்குக் காரணம்நான் ஆகேன்
என் சாகாமருந்தே! செங்கை
தாங்கென்னை; உன்றன்நெடும் புயத்தினில்நான்
வீழ்வதற்குத் தாவு கின்றேன்.
நீதூரம் இருக்கின்றாய் ஓகோகோ
நினைப்பிழந்தேன் என் துரையே!
நிறைகாதல் உற்றவரின் கதியிதுவோ!
என்செய்கேன் நீணிலத்தே!

காதல் நினைவுகள்-3

3. காதலன் காதலிக்கு
"பறந்து வா!"

*
காதலியே,
என்விழிஉன் கட்டழகைப்
பிரிந்ததுண்டு! கவிதைஊற்றிக்
கனிந்ததமிழ் வீணைமொழி என்செவிகள்
பிரிந்ததுண்டு! கற்கண்டான
மாதுனது கனியிதழைப் பிரிந்ததுண்டென்
அள்ளூறும் வாய்தான்! ஏடி

மயிலே,
உன்உடலான மலர்மாலை
பிரிந்ததுண்டென் மார்பகந்தான்!
ஆதலின்என் ஐம்பொறிக்கும் செயலில்லை;
மீதமுள்ள ஆவி ஒன்றே
அவதியினாற் சிறுகூண்டிற் பெரும்பறவை
ஆயிற்றே! "அன்பு செய்தோன்
சாதல்அடைந்தான்" எனும்ஓர் இலக்கியத்தை
உலகுக்குத் தந்திடாதே!
சடுதியில்வா! பறந்துவா! தகதகென
முகம்காட்டு! தையலாளே!

காதல் நினைவுகள்-2

2. காதலற்ற பெட்டகம்

உள்ளம் உருக்கி, உயிர் உருக்கி, மேல்வியர்வை
வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி
ஓடையின் ஓரம் உயர்சோலைக்குள் என்னைக்
கோடை துரத்திடநான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

* * * * * *

பட்டுவிரித்த பசும்புல்லின் ஆசனமும்
தொட்டுமெது வாய்வருடத் தோய்தென்றல் தோழியும்
போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும்
சாந்து மகரந்தம் சாரும் நறுமலர்த்தேன்,
தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம்
ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்!

* * * * * * *

கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப்
பட்டத் தரசாக வீற்றிருந்த பாங்கினிலே
கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே
அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத்
தேய்ந்த வழிநடந்தேன்!-காதல் திருவுருவம்!
ஒன்றி உளத்தை உறிஞ்சிவிட அப்படியே
நின்றேன் வனிதை நெடுமாதுளை அருகில்!
தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட
தீங்கனியிரண்டு தெரிய இருக்கு மெழில்
மாதுளையே, கேளாய் மலர்ச்சோலை நீ, நான்தான்.
வாதுண்டோ என்றேன். மலர்க்கண் சிவந்துவிட்டாள்!
பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல்
துள்ளிவிழுந்து சுவைத்த சுவைக் கிடையில்
தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு
மாயமருந் தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவாம்.
மாதுளமும் அங்கு வருஷிக்கும் பேரன்பும்
தீதின்றி வாழ்க செழித்து!

காதல் நினைவுகள்- 1

1. ஆடுகின்றாள்

கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த
புலையுலகம் போக்கினேன். போக்கிக்--கலையுலகம்
சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள்
நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு.

விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின்
வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக்
கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என்
மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து.

சதங்கை கொஞ்சும் பாதம் சதிமிதிக்கும்.வானில்
மிதக்கும்அவள் தாமரைக்கை. மேலும்--வதங்கலிலாச்
சண்பகத்து நல்லரும்பு சாடைபுரி கின்றவிரல்,
கண்கவரும் செம்பவளக் காம்பு.

செந்தமிழை நல்லிசையைத் தேன்மழையை வானுக்குத்
தந்தோம்என் னும்தாள மத்தளங்கள்--பந்தியாய்
இன்னஇடம் இன்னபொருள் என்றுணர்த்தும் அன்னவளின்
வன்னஇடை வஞ்சிக் கொடி.

கோவை உதட்டை ஒளிதழுவும்.அவ்வொளியில்
பாவைதன் உள்ளத்தின் பாங்கிருக்கும்--தாவும்அதைக்
கண்ணாற் பதஞ்செய்து கையோடு நற்கலையைப்
பண்ணால் உயிரில்வைத்தாள் பார்.

இளமை, அழகு, சுவைகொள்இசை, என்னும்
களமெழுந்த நாட்டியத்தைக் கண்டேன்--உளமார
நானெந்தத் துன்பமுமே நண்ணுகிலேன் பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேன்.