தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

என்னுடைய பட்டாம்பூச்சி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். மூன்று லட்சத்திற்கும் அதிகமான நண்பர்களால் கவரப்பட்ட அந்த வலைப்பூவிற்கு வருகை தாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன், - ஜெகதீஸ்வரன்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்-3

அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்

பரத்தில் சென்றாலும் .....அகப்பேய்
பாரிலே மீளுமடி
பரத்துக்கு அடுத்தஇடம் .....அகப்பேய்
பாழது கண்டாயே. 51
பஞ்ச முகமேது .....அகப்பேய்
பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி .....அகப்பேய்
குருபா தங்கண்டாயே. 52
பங்கம் இல்லையடி .....அகப்பேய்
பாதம் இருந்தவிடம்
கங்கையில் வந்ததெல்லாம் .....அகப்பேய்
கண்டு தெளிவாயே. 53
தானற நின்றவிடம் .....அகப்பேய்
சைவங் கண்டாயே
ஊனற நின்றவர்க்கே .....அகப்பேய்
ஊனமொன்று இல்லையடி. 54
சைவம் ஆருக்கடி .....அகப்பேய்
தன்னை அறிந்தவர்க்கே
சைவம் ஆனவிடம் .....அகப்பேய்!
சற்குரு பாதமடி. 55
பிறவி தீரவென்றால் .....அகப்பேய்!
பேதகம் பண்ணாதே
துறவி யானவர்கள் .....அகப்பேய்!
சும்மா இருப்பார்கள். 56
ஆரலைந் தாலும் .....அகப்பேய்!
நீயலை யாதேடி
ஊர லைந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே. 57
தேனாறு பாயுமடி .....அகப்பேய்!
திருவடி கண்டவர்க்கே
ஊனாறு மில்லையடி .....அகப்பேய்!
ஒன்றையும் நாடாதே. 58
வெள்ளை கறுப்பாமோ .....அகப்பேய்!
வெள்ளியுஞ் செம்பாமோ
உள்ளது உண்டோ டி .....அகப்பேய்!
உன் ஆணை கண்டாயே. 59
அறிவுள் மன்னுமடி .....அகப்பேய்!
ஆதாரம் இல்லையடி
அறிவு பாசமடி .....அகப்பேய்!
அருளது கண்டாயே. 60
வாசியிலே றியதடி .....அகப்பேய்!
வான் பொருள் தேடாயோ
வாசியில் ஏறினாலும் .....அகப்பேய்!
வாராது சொன்னேனே. 61
தூராதி தூரமடி .....அகப்பேய்!
தூரமும் இல்லையடி
பாராமற் பாரடியோ .....அகப்பேய்!
பாழ்வினைத் தீரவென்றால். 62
உண்டாக்கிக் கொண்டதல்ல .....அகப்பேய்!
உள்ளது சொன்னேனே
கண்டார்கள் சொல்வாரோ .....அகப்பேய்!
கற்வனை அற்றதடி. 63
நாலு மறைகாணா .....அகப்பேய்!
நாதனை யார் காண்பார்
நாலு மறை முடிவில் .....அகப்பேய்!
நற்குரு பாதமடி. 64
மூலம் இல்லையடி .....அகப்பேய்!
முப்பொருள் இல்லையடி
மூலம் உண்டானால் .....அகப்பேய்!
முத்தியும் உண்டாமே. 65
இந்திர சாலமடி .....அகப்பேய்!
எண்பத்தொரு பதமும்
மந்திரம் அப்படியே .....அகப்பேய்!
வாயைத் திறவாதே. 66
பாழாக வேணுமென்றால் .....அகப்பேய்!
பார்த்ததை நம்பாதே
கேளாமற் சொன்னேனே .....அகப்பேய்!
கேள்வியும் இல்லையடி. 67
சாதி பேதமில்லை .....அகப்பேய்!
தானாகி நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் .....அகப்பேய்!
ஒன்றுந்தான் இல்லையடி. 68
சூழ வானமடி .....அகப்பேய்!
சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி .....அகப்பேய்!
மெய்யது கண்டாயே. 69
தானும் இல்லையடி .....அகப்பேய்!
நாதனும் இல்லையடி
தானும் இல்லையடி .....அகப்பேய்!
சற்குரு இல்லையடி. 70
மந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி .....அகப்பேய்!
சமயம் அழிந்ததடி. 71
பூசை பசாசமடி .....அகப்பேய்!
போதமே கோட்டமடி
ஈசன் மாயையடி .....அகப்பேய்!
எல்லாமும் இப்படியே. 72
சொல்ல லாகாதே .....அகப்பேய்!
சொன்னாலும் தோடமடி
இல்லை இல்லையடி .....அகப்பேய்!
ஏகாந்தங் கண்டாயே. 73
தத்துவத் தெய்வமடி .....அகப்பேய்!
சதாசிவ மானதடி
மற்றுள்ள தெய்வமெல்லாம் .....அகப்பேய்!
மாயை வடிவாமே. 74
வார்த்தை அல்லவடி .....அகப்பேய்!
வாசா மகோசரத்தே
ஏற்ற தல்லவடி .....அகப்பேய்!
என்னுடன் வந்ததல்ல. 75